கட்டுரை

இந்துத்துவ வதந்திகளை உடைக்கும் ஆல்ட் நியூஸ் நிறுவனர் கைது…

ஒவ்வொரு நாளும் வருகிற செய்திகள் கவலையளிப்பதாகவும் அச்சமூட்டுவதாகவுமே இருக்கின்றன.

தன்னுடைய ஐடி பிரிவைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை உருவாக்கி, அவற்றை உண்மை போலவே வாட்சப், பேஸ்புக், டிவிட்டர் என அனைத்து சமூக ஊடகங்களில் பரப்பியபடியே மக்களின் மனதில் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சிக்கட்டிலில் தொடர்ந்து அமர்ந்துகொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல். இதனை எதிர்த்து நாம் ஆங்காங்கே குரல் கொடுத்தாலும், இந்துத்துவ கும்பல்கள் பரப்புகிற ஒவ்வொரு வதந்தியையும் போலிச்செய்தியையும் ஆய்வுசெய்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆதாரங்களுடன் வெளியிடுவது காலத்திற்கு நிற்கக்கூடிய ஆவணமாக மாறும். இதனை முற்போக்கு அமைப்புகள் கூட செய்யமுடியாமல் குழம்பியும் தயங்கியும் இருந்த காலகட்டத்தில், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளத்தை பிரதிக் சின்ஹாவும் முகமது சபீரும் 2017 ஆம் ஆண்டு துவங்கினர். அதுவும் இந்துத்துவாவின் மையமாக இருக்கிற குஜராத்தின் தலைநகரான அகமாபாத்தில் அலுவலகத்தைத் திறந்து வேலையை ஆரம்பித்தனர்.

அன்றில் இருந்து இன்றுவரையிலும் வைரலாகிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஃபேக் செய்திகளை ஆய்வுசெய்து, அவற்றின் உண்மைத்தன்மையினை ஆதாரப்பூர்வமாக ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் போட்டு உடைத்துவருகின்றனர்.

இந்தியாவில் இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசுபவர்களை அமைதியாக்குவதற்கு இரண்டே இரண்டு வழிகளைத் தான் இந்துத்துவ கும்பல்கள் பயன்படுத்திவருகின்றன. அதில் முதலாவதாக கொன்றுவிடுவது. அதனைத்தான் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுவீழ்த்தியது அப்படித்தான்.
“உயிரோடு இருந்தால் தானே எங்களை எதிர்த்துப் பேசுவாய். ஒழிந்துபோ” என்பது தான் அவர்களது எண்ணம்.
இரண்டாவது வழிமுறை என்னவென்றால், இந்த்துத்துவாவை அம்பலப்படுத்துவோரைக் கைதுசெய்தும் சிறையில் அடைத்தும் அவர்களை இயங்கவிடாமல் தடுப்பதாகும். அப்படித்தான் டீஸ்டா செடல்வாட், ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ் உள்ளிட்ட ஏராளமான மனித உரிமைப் போராளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவைத்திருக்கிறது இந்த பாஜக அரசு.


மனித உரிமை குறித்த அக்கறை இருப்போரை கொன்றும், கைதுசெய்தும் இந்துத்துவாவின் கருத்துகளை எதிர்க்கமுடியாமல் செய்வது ஒருபுறமும், இனி எவரும் போராளிகளாக வரவே கூடாது என்பதற்காக இன்றைய தலைமுறையினரின் மண்டைக்குள் பொய்களையும் வதந்திகளையும் உண்மைபோல திணித்துவிடுவதையும் இந்த கேடுகெட்ட இந்துத்துவ கும்பல்கள் செய்துகொண்டே வருகின்றன.

இந்த இரண்டையும் உடைத்தெரியும் பணியினைத் தான் ஆல்ட் நியூஸ் செய்துவருகிறது. அதுவும் இந்துத்துவத் தலைநகரான அகமாபாத்தில் இருந்துகொண்டே இந்தியாவி மிகப்பெரிய எதிர்க்கட்சிகளெல்லாம் செய்யாத ஒரு இமாலயப் பணியினை ஆல்ட் நியூஸ் செய்துவருகிறது.

சுமார் 100 முக்கியமான வதந்திகளையும் அவற்றுக்கு ஆல்ட் நியூஸ் ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்களையும் தொகுத்து “India Misinformed” என்கிற நூலை வெளியிட்டார்கள். அந்த நூல் நாடெங்கிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்நூலை தமிழில் “இந்தியா_ஏமாற்றப்படுகிறது” என்கிற பெயரில் நான் மொழிபெயர்த்தேன். அதனை மொழிபெயர்க்கும் முன்னர், அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிற கட்டுரைகளை மட்டுமல்லாமல் ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் வெளியகியிருந்த ஏறத்தாழ அனைத்து கட்டுரைகளையும் வாசித்தேன். எப்படியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு பணியினை ஆல்ட் நியூஸ் செய்திருக்கிறது என்று மலைப்பாக இருந்தது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பாஜகவும் இந்துத்துவ கும்பல்களும் சும்மா இருப்பார்களா என்ன. ஆல்ட் நியூஸ் இணையதளத்தை துவக்கிய இருவரில் ஒருவரான முகமது சுபேரின் மீது பார்வையைத் திருப்பி அவரைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். 2018 ஆம் ஆண்டு டிவிட்டரில் அவர் எழுதிய உப்புசப்பில்லாத ஒரு ட்வீட்டின் மீது, ஒரு போலி டிவிட்டர் அக்கௌண்ட் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு, ஒரு எஃப்ஐஆர் பிரதியைக் கூட கொடுக்காமல், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் முகமது சுபேரைக் கைதுசெய்திருக்கிறது இந்த அரசு.

இனி அவரை காலவரையின்றி சிறையில் அடைத்து குதூலிப்பார்கள், ஆல்ட் நியூஸை முடக்கப்பார்ப்பார்கள், இந்த வழக்கில் மீண்டு சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவர் மீது வழக்கு மேல் வழக்காகப் போடுவார்கள், நீதிமன்றம் நீதிமன்றமாக அலையவிடுவார்கள், முகமது சுபேரைப் போல உண்மைகளை உரக்கப் பேச இனிமேல் எவருமே முன்வரவே கூடாது என்கிற பொதுக்கருத்தையும் சமூகத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கமன்றி வேறில்லை இந்த இந்துத்துவ கும்பல்களுக்கு…

இப்போதும் மிகச்சிலர் தவிர ஒட்டுமொத்த இந்தியாவும் அமைதியாக இருப்பதைப் பார்க்கத்தான் பெருங்கவலையாக இருக்கிறது. நமக்காகப் பேசும் ஒன்றிரண்டு போராளிகளின் குரல்களையும் நெரித்து பேசவிடாமல் தடுக்கிற இவர்களை எதிர்த்து ஒட்டுமொத்த குரலாக நாம் ஒலிக்க வேண்டிய நேரமிது. இல்லையென்றால் இந்தியா என்கிற தேசமே சுடுகாடாகி மிச்சமிருக்கப்போவது வெறுமனே சாம்பல்கள் மட்டும் தான்…

முகமது சுபேர் நமக்காக உழைத்தவர், உண்மைகளை நாம் அறியவேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்தவர்…. அவர் மீண்டுவரவேண்டும்… அதற்கு நம்முடைய கரங்களும் குரல்களும் ஒருங்கிணையவேண்டும்…

#MohammedZubairArrested #AltNews #இந்தியா_ஏமாற்றப்படுகிறது

Leave a comment